யார் பொய்யர்? (பாகம்-1)

By முஸ்லிம்

WWW.IIPONLINE.ORG

உண்மைகளின் தாயகம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2 : 42)

சமீபகாலமாக இஸ்லாத்தை ஆய்வு செய்கிறோம் பாருங்கள் என்று தமிழகத்தில் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று தலைப்பிட்டு தார்ப்பாயில் வடிகட்டிய தங்கள் பொய்களை கட்டுரையாக வடித்து இணையத்தில் ஏற்றுமதி செய்துள்ளனர். இவர்களின் பித்தலாட்டங்களை தமிழ் கூறும் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டவே இப்பதில் கட்டுரையை பதிகிறோம்.

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

150 கோடி முஸ்லீம்களின் ஒப்பற்ற தலைவரை நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு பொய்யன் என்று வசைமாறி பொழிந்துள்ள அக்கட்டுரையை எழுதிய அன்பருக்கு ஒன்றை சொல்லி வைக்கிறோம். அது ‘உங்களின் நரகல் நடை விமர்சனங்களுக்கு நீங்கள் கூனிக் குறுகும் அளவில் உங்கள்; தொனியிலே எங்களால் விடையளிக்க இயலும் என்றாலும் இஸ்லாம் என்ற பகுத்தறிவு பாசறை அத்தகைய ஒழுக்கத்தை எங்களுக்குக் கற்றுத்தரவில்லை. நீங்கள் இஸ்லாத்தை விளங்கவேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன்; அணுகாததுவரை உங்களால் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவே இயலாது. இறைவேதமான திருக்குர்ஆனை, அதை நமக்குப் பெற்றுத் தந்த இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, இஸ்லாத்தின் சீரிய கோட்பாடுகளை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு சத்தியத்தை சரியான முறையில் விளங்கவேண்டும் என்ற சிந்தனையில் இஸ்லாத்தை அணுகுங்கள். இல்லையேல் உங்களின் இம்முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலும்தான் மிஞ்சும்.

நபி (ஸல்) அவர்கள் பற்றி மக்கா நகர் குறைஷிகள்

இந்தியாவில் வாழும் இந்து மக்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஜாதியப் பிரிவுகளால், வர்ணாசிரமத் தத்துவம் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியால் பிரித்துள்ள பிராமணர்கள் என்ற சிறு கூட்டம், எவ்வாறு தனது சுயநல கௌரவ சுகபோகங்களை அதன்மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால் அந்த அரபுப் பிரதேசத்திலும் ஜாதிய கட்டமைப்புகளால் தலைவர்களாக சிலர் அம்மக்களை ஆட்டிப்படைத்தனர்.

காட்டுமிராண்டி சமுதாயமாக வாழ்ந்த அந்த அரபுப் பிரதேசத்தில், முஹம்மது (ஸல்) அவர்களின் 40 வது வயதில் இஸ்லாம் என்னும் இப்பூரண ஜோதியை அல்லாஹ் அருளினான். இஸ்லாம் தனது குலப்பெருமையையும் இனவேற்றுமையையும் வேறோடு சாய்க்கிறது என்பதை அறிந்த அன்றைய அரபுப் பிரதேசத்தின் தாருந்நத்வா அறிஞர்கள் இஸ்லாத்தை எதிர்த்தனர். இருப்பினும் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நம்பிக்கைத் தன்மையில் எந்த சந்தேகத்தையும் கிளப்பவில்லை. இறை மறுப்பிலிருந்த அன்றைய சாதாரண மக்கள் முதல் அபூஜஹ்ல் தலைமையில் அமைந்த அந்த தாருந்நத்வா அறிஞர்கள் வரை முஹம்மது (ஸல்) அவர்களை ஸாதிக் – உண்மையார், வஃத் – வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், அமீன் – நம்பிக்கைக்குறியவர் என்றே அழைத்து மகிழ்ந்தனர். எந்த அளவிற்கெனில் அவர்கள் தங்களின் தீனார் திர்ஹங்கள் மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக முஹம்மது (ஸல்) அவர்களை பாவித்தனர். அவர்களின் நேர்மை நாணயத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு உதாரணத்திற்காக வரலாற்றிலிருந்து இரண்டு விஷயங்கள்.

1. நபித்துவத்தின் ஆரம்ப நாட்களில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்திவைப்பதற்காக மக்கா குறைஷித் தலைவர்களை அழைத்து ஓரிடத்தில் ஒன்று கூட்டினார்கள். பிறகு அவ்விடத்திலிருந்த சிறு மலையைக் காண்பித்து ‘இம்மலைக் குன்றிற்குப் பின்னால் ஒரு கூட்டம் உங்களை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா’ என்று அக்குறைஷிகளிடம் வினவுகிறார்கள். அதற்கு ஒட்டுமொத்தமாக அந்த குறைஷிகள் ‘முஹம்மதே (ஸல்) நீங்கள் அப்படி சொன்னால் நிச்சயமாக நாங்கள் நம்பியே தீருவோம். ஏனெனில் நீங்கள் ஸாதிக்குல் வஃதில் அமீனாக இருக்கிறீர்கள். அதாவது எங்களில் பொய்யுரைக்காத உண்மையாhளராக, வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராக, எங்களில் நம்பிக்கைக்குறியவராக இருக்கிறீர்கள்’ என்று விடைபகர்ந்தனர்.

2. மற்றொரு சம்பவம், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன் இறை இல்லமாம் கஃபா குறைஷிகளால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. சுவனத்தின் அத்தாட்சிகளில் ஒன்றான ஹஜரல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை கஃபாவில் நிறுவுவதில் அக்குறைஷித் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாமல் விழித்த அந்நேரத்தில் குறைஷிகள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். அதாவது மறுநாள் காலையில் கஃபாவின் வாசல் வழியாக யார் முதலில் நுழைகிறாரோ அவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. அக்காலை அவர்கள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நுழையவே அக்குறைஷிகள் அனைவரும் நம்மிடையே தீர்பளிக்க சரியான ஆள்தான் கிடைத்திருக்கிறார் என்று பெருமிதம் கொண்டனர். நம்மிடையே இந்த முஹம்மது (ஸல்) நீதமாகவே நடந்து கொள்வார். நாம் இவரை அநியாயம் செய்பவராகவோ அநீதி இழைப்பவராகவோ காணவில்லை என ஒவ்வொரு கோத்திரத்தவரும் தீர்ப்பளிப்பதற்கு முஹம்மது (ஸல்) அவர்களை நிபந்தனையின்றி ஆமோதித்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் போர்வை ஒன்றை கொண்டுவரச் சொல்லி அக்கல்லை அப்போர்வையின் மீது வைத்து, போர்வையின் ஒவ்வொரு முனையையும் ஓவ்வொரு குறைஷித்தலைவரையும் பிடிக்கவைத்து அந்த கல் கஃபாவில் நிறுவப்பட்டது. குறைஷிகளின் அப்பிரச்சனை முடிந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குறைஷிகள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் நபராக அன்று நுழைந்திருந்தாலும், இவர்கள் கூறுவது போல பெரும் பொய்யராக இருந்திருந்தால் இதைச் சொல்லியே நபிகளை அவர்கள் புறக்கணித்திருக்க முடியும். இவர்கள் புளுகுவதைப் போல முஹம்மது (ஸல்) அவர்கள் தனிமனித வாழ்வில் பொய்யராக இருந்திருந்தால் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீதி சொல்பவராக முஹம்மது (ஸல்) அவர்களை குறைஷிகள் நியமித்திருப்பார்களா? தங்களின் விலைமதிப்பற்ற பொருட்களை அவர்களை நம்பி ஒப்படைத் திருப்பார்களா? உண்மையார், வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், நம்பிக்கைக்குரியவர் என்று அவர்களுக்குப் பட்டப் பெயர் சூட்டியிருப்பார்களா? ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று ஒரு தலைப்பிட்டு கட்டுரை வடித்த மகானுக்கு இந்த சிந்தனை கூடவா இல்லை?

இஸ்லாமிய வரலாற்றை அறிந்த யாருவரும் இவைகளை நன்கு அறிவார்கள் என்றாலும் இச்சரித்திரங்கள் ஏன் இங்கு நினைவூட்டப்படுகிறது எனில் இவர்களைவிட இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கருவறுக்கத் துணிந்த அந்த குறைஷிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எந்தக்குறையையும் காணவில்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்களோடு வாழ்ந்த அக்குறைஷிகள் நுபூவத்திற்கு முன்னரும் பின்னரும் தனிமனித வாழ்வில் நபி முஹம்மது (ஸல்) அவர்களை உண்மையாளராகவும் வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவுமே சான்று பகர்வதைக் காண்கிறோம்.

இஸ்லாத்தின் கோட்பாடான ‘வணங்கத் தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே’ என்ற பேருண்மையை ஏற்றுக்கொண்டு விட்டால் அவர்கள் கற்பனையாக தெய்வங்கள் என்று காலங்காலமாக நம்பியவைகளை மறுக்க வேண்டி வரும் என்பதால் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அக்குறைஷிகள் எதிர்த்தனர். தங்கள் பதவி கௌரவம் பாதிக்கப்பட்டதினாலும், ஆண்டாள் அடிமை சாசனத்தை இஸ்லாம் கலைந்து அவர்கள் அச்சமுதாயத்தில் கட்டமைத்த ஜாதிய ஏற்றத்தாழ்வை உடைத்ததினாலும், நிறம் இனம் மொழி வேற்றுமைகளை வீழ்த்தி மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்களே என்பதை போதித்ததாலும் மட்டுமே முஹம்மது (ஸல்) அவர்களை அக்குறைஷிகள் எதிர்த்தனர். இஸ்லாத்தின் அசுர வளர்ச்சி கண்டு பொறுக்காமல் தங்களால் இயன்ற அளவில் புழுதிகளை அள்ளித் தூற்றத் துவங்கினர்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையாளர்களுக்கெல்லாம் உண்மையாளர், உண்மை என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர்கள், உண்மைக்கு ஓர் அழகிய முன்மாதிரி என்பதை திருக்குர்ஆன் அளிக்கும் சான்றுகள் மூலமும், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் நம்மால் மிகச்சுலபமாக நிறுவிட இயலும். எனினும் நபி (ஸல்) அவர்களை பொய்யர் என்று எழுதியிருக்கும் குறுமதி படைத்த, எதிலும் நம்பிக்கையற்ற, பொய்களிலும் புரட்டுகளிலும் புரண்டுவாழும் இப்பொய்யர்களுக்கு அந்த நல் உபதேசங்கள் மண்டையில் உறைக்கவா போகிறது? எனவே இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தே முதலில் இங்கு நிறுவுகிறோம்.

சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்…

மறுமொழி இடுக